Thursday, July 27, 2006

என் பெயரில் போலிப் பதிவுகள்.

என் பெயரில் என் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளும் பின்னூட்டங்களும் இடப்பட்டுள்ளன. இவை எதுவுமே நான் போட்டதில்லை
என் வலைத்தளம் sivagnanamji.blogspt.com. அதில் என் படம் இருக்காது. மாறாக, என் புகைப்படம் கொண்ட sivananamji.blogspot.com எனும் பதிவுகளும்
பின்னூட்டங்களும் போலியானவை. அவற்றால்
பதிவர் எவருக்கேனும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். போலிகளை இனங்கண்டு வெறுத்தொதுக்க வேண்டுகிறேன்.
வலைதளத்தில் கல்வியாளர்கள், கண்ணியமானவர்கள், கணிணி விற்பன்னர்கள் போன்றோர் மட்டுமே இருப்பார்கள் எனும் என்
நம்பிக்கை, தகர்ந்தது.
என் ப்ளாக்கர் எண் 16342789. நான் அதர் ஆப்ஷன் வைத்திருக்கும் பதிவுகளில் பின்னூட்டம்
இடமாட்டேன். அப்படி இட நேர்ந்தால் அல்லது ப்ளாக்கர் இல்லாத பதிவுகளில் இட நேர்ந்தால்
அப்பின்னூட்ட்த்தின் நகலை நான் அப்போதைக்கு
குறிப்பிடும் என் பதிவுகள் ஒன்றில் பின்னூட்டமாக இடுவேன். அவ்வாறு இடுவதையும் சொல்வேன். அதை சரி செய்து பார்க்காமல் என்
பெயரில் வரும் பின்னூட்டத்தை அனுமதிக்காதீர்கள்.
என் பெயரையும், புகைப்படத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் வலைப்பதிவர் ஏன் இப்படிச் செய்கின்றார் என்பது புரியவில்லை.
என் தலைமுறை தனிமனிதத் தாக்குதலில்
நம்பிக்கை அற்றது; இனவழி உரிமைகளை எச்சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதது.
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பிற்கு எடுத்துக்காட்டாக, கலைஞர்,"சங்கத்தமிழி"ல் குறிப்பிடுவது
பெரியார்-ராஜாஜி நட்பைத்தானே?
அரசியல் வித்தகரும், பொதுவுடைமைக்கட்சியின்(இடது) முன்னோடியுமான தோழர் பி.ராமமூர்த்தியின்
திருமணம் பெரியார் தலைமையில்தானே நடந்தது?
கல்லூரி மாணவனாக, பெரியாரைப் பார்க்கச்
சென்ற பொழுது, அப்பெருமகனார் முதுமைக்காலத்திலும் எழுந்து நின்று வரவேற்றதும்,பின்னர் எழுந்து நின்று வழியனுப்பியதும் என் நெஞ்சை விட்டு நீங்கா
நினைவு ஆகும்.
பிறர் பெயரில் பதிவிடுவோரையெல்லாம்
கணிணி உலகில் ஏற்றிவிடத்தான் இத்தனை ஆண்டுகாலப் போராட்டமா எனும் கசப்பு உணர்வே எழுகின்றது.

"கள்ளிப்பால் குடிச்சு...."

சந்தோஷின் சமையல் ஆராய்ச்சி பற்றி குறிப்பிடுகையில்,"சீக்கிரமா சமைக்கக் கத்துக்கங்க; இல்லாட்டி உங்களுக்கெல்லாம் கல்யாணமுன்னு ஒண்ணு நடக்குறது கஷ்டம்தான்"னு துளசி எச்சரிக்கை விட்டாங்க.
சமையல் செய்ய கற்றுக் கொண்டாலும் கூட,கல்யாணம் நடப்பது கஷ்டம்தான்னு புள்ளிவிபரம் கூறுது. கள்ளிப்பால்,விதைநெல் புண்ணியத்தால் பால்விகிதம்(sexratio) குறைந்து வருகின்றது.
கடந்த நூறாண்டுகளில், தமிழ்நாட்டில் ஆண்:பெண் விகிதம் குறைந்து வருவதை கீழ்க்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன:
1901 ல் 1000:1044
1911 ல் 1000:1042
1921 ல் 1000:1029
1931 ல் 1000:1027
1941 ல் 1000:1011
1951 ல் 1000:1007
1961 ல் 1000:992
1971 ல் 1000:978
1981 ல் 1000:977
1991 ல் 1000:974
2001 ல் 1000:986(quick estimate)

2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்:பெண் விகிதம் 1000:933.

மொத்த மக்கட்தொகையில் ஆண்களை விட
பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைவிட 0-6 வயது பிரிவினரில் இவ்விகிதம்
இன்னும் குறைவாக இருப்பதுதான் அச்சுறுத்துகின்ற்து. 2001 சென்ஸஸ்படி,தமிழ்நாட்டில் 0-6 வயது பிரிவில்
ஆண்பெண் விகிதம் 1000:942 ஆகும்(இந்தியாவில்
இவ்விகிதம், 1000:927).இவ்வயதுப் பிரிவில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணம் கள்ளிப்பாலா அல்லது விதைநெல்லா அல்லது வேறா?
சமையல் செய்யக் கற்றுக்கொண்டாலுங்கூட,
ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இல்லாவிட்டால்,"கல்யாணம்னு ஒண்ணு நடப்பது
கஷ்டம்"தானே?

Sunday, July 23, 2006

உலக மக்கள்தொகை வளர்ச்சி வேகம்

இன்றைய(7/23/06) நிலவரப்படி உலக மக்கள்தொகை 6530 018 029(USCensus Bureau,World POPClock Projection)
இவ்வளர்ச்சியை அடைவதற்கு எவ்வளவு காலம் பிடித்தது என்பதைப் பார்ப்போமா?
உலக மக்கள்தொகை முதன்முதலாக 1804 ல்
1 பில்லியனை எட்டிப் பிடித்தது.அதாவது ஒரு பில்லியன் மக்கள் தொகையை அடைவதற்கு 1804
ஆண்டுகள் தேவைப்பட்டது
1927 ல்- 123 ஆண்டுகளில்- 2 பில்லியனாக அதிகரித்தது.
1960 ல்-33 ஆண்டுகளில்- 3 பில்லியனாக
அதிகரித்தது
1974 ல்-14 ஆண்டுகளில்- 4 பில்லியனாக
அதிகரித்தது
1987 ல்-13 ஆண்டுகளில்- 5 பில்லியனாக
அதிகரித்தது.
1999 ல்-12 ஆண்டுகளில்- 6 பில்லியனாக
அதிகரித்தது
2013 ல்-14 ஆண்டுகளில்- 7 பில்லியனாகவும்
2028 ல்-15 ஆண்டுகளில்-8 பில்லியனாகவும்
2050 ல்-22 ஆண்டுகளில்-11 பில்லியனாகவும் அதிகரிக்குமென்று முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.(UNPF Report,2001)
மக்களே, இந்த வேகம் போதுமா........?

Friday, July 14, 2006

நெல்லையால் தொல்லையா?

"மதுபாலா,திவ்யாபாரதி,மணிஷா,த்ரிஷா,ஜோதிகா என பலபேர் காலடி பட்ட புண்ணியமண்"(அம்பி) நெல்லையில் ஆகஸ்ட்டில் நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு,அம்பி அறைகூவி அழைப்பு விடுத்துள்ளார். வாழ்க!
சென்னையிலும் ஒரு மாநாடு நடைபெறுமென்றும்,அதன் பொறுப்பை சுபா கவனித்துக் கொள்வார் என்றும் அம்பி அறிவித்துள்ளார்
சென்னையில் டோண்டு,ட்டிபிஆர் ஜோஸப் முயற்சியில் இரு சந்திப்புகள்-மே 29 மற்றும் ஜூலை 2 ஆகிய நாட்களில்- நிகழ்ந்துள்ளன. அடுத்த சந்திப்பிற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன
இந்நிலையில்,சென்னையில், வலைப்பதிவர் சந்திப்பிற்கான எற்பாட்டை சுபா கவனித்துக் கொள்வார் எனும் அறிவிப்பு ஏன்?
டுபுக்கு அவர்களுக்கு இவ்விபரம் தெரியுமா?
கீரைக் கடைக்கும் எதிர்க்கடையா?
(பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், விரவாஞ்சி,பாரதி போன்றோரின் ஆன்மா என்னை
மன்னிக்கட்டும். நெல்லை நண்பர்கள் கோபிக்கவேண்டாம்;நெல்லையின் சிறப்பாக அம்பி குறிப்பிட்டதைத்தான் முதல் இரு வரிகளில் மீள்பதிவு செய்தேன்)

Wednesday, July 12, 2006

"மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க..."

மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க' எனும் தலைப்பிட்டு 'தின மலர்'10/07/06 நாளிதழில் கீழ்வரும் செய்தி வெளியாகி உள்ளது
அரசு டாக்டர் சங்க மாநிலத் தலைவர்,"மருத்துவக்கல்லூரி துவக்க ரூ.200 கோடி செலவாவதைத் தவிர்த்து,ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் ரூ. 20 கோடியில் வசதிகளை செய்தாலே இடங்களை அதிகரித்து கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்"என்று கூறியுள்ளார்.
அரசின் வசம் நிதித்தட்டுப்பாடு இருப்பதால்,ஒரு தற்காலிக ஏற்பாடாக இதைக்கூறுகிறாரா அல்லது நிரந்தரத்தீர்வா என்பது தெரியவில்லை
மக்கள்தொகை அதிகரித்து வருகின்றது;புதுப்புது நோய்களும் தோன்றிவருகின்றன;மக்களிடம் விழிப்புணர்வும் வளர்ந்து வருகின்றது.இந்நிலையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதுவே பொருத்தமாகும்
மேநிலைக் கல்வி முடித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் எவ்வித உடன்தொடர்பும்(correlation) இல்லை
மாநிலத்தில் இந்த ஆண்டில் 52000 பொறியியல் இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகின்றது.(நிர்வாக ஒதுக்கீடு தனி)
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 27050 இடங்கள் உள்ளன.இதில் கவுன்சிலிங் மூலம் 14906 இடங்கள் நிரப்பப்படும்
தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 187 இடங்கள் போக 1458 இடங்கள் மட்டுமே உள்ளன.பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீடு போக 36 இடங்கள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 4000 ஆண்டுக்கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இக்கட்டணம் ரூ.1,30,000 என்று ராமன் கமிட்டி பரிந்துரைத்து உள்ளது
இந்நிலையில் தொலைநோக்குடன் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதுதான் நிரந்தரத் தீர்வு ஆகும்.

Saturday, July 08, 2006

மன்னராட்சியும் மக்களாட்சியும்

அரசியல் அறிவியல் வகுப்பு.பேராசிரியர் மன்னராட்சி முறைக்கும் மக்களாட்சி முறைக்கு முள்ள வேறுபாட்டை வரலாற்று ஆதாரங்களுடன்
விளக்கிக்கொண்டிருந்தார்.....கடைசி பென்ச் வழக்கப்படி.......பேராசிரியருக்குக் கோபம் வந்து விட்டது.கடைசி பென்ச் மாணவன் ஒருவனை சுட்டி எழுப்பிக் கேட்டார்:"நான் என்ன நடத்துகின்றேன்? நீ என்ன செய்கிறாய்?".
மாணவன் வகுப்பை சுற்றுமுற்றும் ஒருமுறை
பார்த்துவிட்டு தலையைக்குணிந்து கொண்டான்.
பேராசிரியருக்குக் கோபம் தீரவில்லை. மீண்டும் கேட்டார்:"எங்கே சொல் பார்ப்போம். மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் என்ன வித்தியாசம்?"
மாணவன் ஒருமுறை தொண்டையைக் கணைத்துக் கொண்டு சொன்னான்:"ஸார், ராஜா
மகன் ராஜாவானா அது மன்னராட்சி; மந்திரிகள்
பிள்ளைகள் மந்திரிகள் ஆவது மக்களாட்சி;ராஜ பரம்பரை முறையை ஒழித்துவிட்டு மந்திரிகள் பரம்பரை முறையைக் கொண்டு வந்தா........"
வகுப்பறை அதிர்ந்தது!

Thursday, July 06, 2006

வ.வா.சங்கம் தேடும் பாடல்-2

"மந்திரி குமாரி"யில் இடம் பெற்றுள்ள எருமைக்கன்னுக்குட்டி பாடலைப் பாடியவர் திருமதி எம். எல். வசந்தகுமாரி
எனவே இது திரு ட்டி.எம்.சவுந்தர ராஜனின் முதல் பாடல் அன்று
வ.வா சங்கப்பதிவிற்கான என் பின்னூட்டத்தில்
"ஒரு வேளை இது கலைஞர் எழுதியப் பாடலாகவும் இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது உறுதி செய்யப் படவில்லை
கேஸட்டில் lyrics: a.marudhakaasi & kaa.mu.sheriff என்றே குறிபிடப் பட்டு உள்ளது

Wednesday, July 05, 2006

வ.வா.சங்கம் தேடும் பாடல்

வருத்தமில்லா வாலிபர் சங்கத் தலைமை "எருமைக் கன்னுக்குட்டி"பாடலைப் பற்றிய விபரம் கேட்டிருந்தது.துளசிகோபால், "தேசி பண்டிட்"டில் கைப்புள்ளையின் வேண்டுகோளையும் 26 பின்னூட்டங்களையும் லிங்க் செய்திருந்தார். சிரிப்புச் சிந்தனையாளரின் ஆசையை நிறைவேற்-
றாமல் விடலாமா? நான்கு நாள் முயற்சியில் கேஸட்டைத் தேடிப் பிடித்துவிட்டேன்
படம்: மந்திரி குமாரி(1950)
தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ்
பாடல்: அ.மருதகாசி & க.மு.ஷெரீப் (ஒட்டு
மொத்தமாகப் போடப் பட்டுள்ளது)
இசை: ஜி.ராமநாதன்
இனி, பாடல்:
ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி

எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு

எ.க...என் எ.க...என்.எ.க
எ.க...என் எ,க

ஏய்ச்சுப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே...
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே....

எ.க...என் எ.க...என் எ.க
எ.க...என் எ.க

நாட்டுக்குத் தலைவனென்று
நம்பும்படி பேசிவிட்டு
வேணசெல்வம் வாரியே போவாரடி...
நாடு செழிக்க எண்ணி
நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே
எவனெவனோ வாழுகிறானே

எ.க...என் எ.க...என் எ.க
எ.க...என் எ.க