Tuesday, May 01, 2007

மே தின வாழ்த்துகள்

பகையில்லாத உள்ளங்கள்;
பசியில்லாத இல்லங்கள்-
அகிலம் காணும் ஒரு காலம்;
அதுவே நமக்குப் பொற்காலம்!

அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துகள்!

Sunday, January 14, 2007

பொங்கல் வாழ்த்து!

போகி முடிந்தது
பொங்கல் மலர்ந்தது
வலைப்பூவர் உலகம்
வாழ்வாங்கு வாழ்க!

Friday, December 29, 2006

வலைப்பதிவர் ரகசிய சந்திப்பு-சென்னை

இது ஒரு மீள்பதிவு

நேற்று (சனிக்கிழமை 23/12/06) மாலை! சென்னை கதீட்ரல் சாலை. தோப்புக்குள்ளிருக்கும், புகழ்பெற்ற "ட்ரைவ் இன்".சிற்றுண்டிக்காகக் காத்திருந்தேன். பின்புறமிருந்து பழகிய சில குரல்கள்! மெல்லத் திரும்பினேன்.



அங்கே,


பறந்து வந்திருக்கும் ட்டீச்சர்

வலைப்பூவர்கள் விபரம் திரட்டியவர்,

நிர்மலமானவர்,

திருமகள்,

'மீன்'மீது 'பிரிய'மானவர்

யானைத்தோழி

நாற்றிசையும் புகழ்மணக்கும் இணையதள வார இதழின் 'அரு'மையான ஆசிரியை.


மற்றும் சிலர் சீரியஸாக விவாதிப்பதைப் பார்த்தேன்!'

பீட்டா ப்ளாக்கர்', '33% இடஒதுக்கீடு', 'வலைதள முன்னேற்றம்' போன்ற சொற்கள் காதில் விழுந்தன. சுற்றுச்சூழ்நிலையையும் மறந்து
அப்படிஎன்னதான் பேசியிருப்பார்கள்?????

புதிர்....... எங்கே பதில்?


இந்தக் குழந்தை யார்?

Sunday, December 24, 2006

வலைப்பதிவர் ரகசிய சந்திப்பு-சென்னை

நேற்று (சனிக்கிழமை 23/12/06) மாலை! சென்னை கதீட்ரல் சாலை. தோப்புக்குள்ளிருக்கும், புகழ்பெற்ற "ட்ரைவ் இன்".சிற்றுண்டிக்காகக் காத்திருந்தேன். பின்புறமிருந்து பழகிய சில குரல்கள்! மெல்லத் திரும்பினேன். அங்கே,
பறந்து வந்திருக்கும் ட்டீச்சர்,

வலைப்பூவர்கள் விபரம் திரட்டியவர்,

நிர்மலமானவர்,

திருமகள்,

'மீன்'மீது 'பிரிய'மானவர்,

யானைத்தோழி

நாற்றிசையும் புகழ்மணக்கும் இணையதள வார இதழின் 'அரு'மையான ஆசிரியையும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்!

மற்றும் சிலர்
சீரியஸாக விவாதிப்பதைப் பார்த்தேன்!

'பீட்டா ப்ளாக்கர்', '33% இடஒதுக்கீடு', 'வலைதள முன்னேற்றம்' போன்ற சொற்கள் காதில் விழுந்தன.
சுற்றுச்சூழ்நிலையையும் மறந்து அப்படி
என்னதான் பேசியிருப்பார்கள்?

Sunday, December 17, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு-12-17-06

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. குறுகியகால அறிவிப்பு எனினும் 22 பதிவர்கள் வருகை தந்தனர். இறுதி நேரத்தில் இடம் மாற்றப்பட்டது எனினும் தொலைபேசித்தகவல் தகவல் கொடுக்கப்பட்டதால் பனகல் பூங்காவிற்குச் சென்று பின்னர் நடேசனார் பூங்காவிற்கு வந்தோரும் உண்டு. கடைசிநேர இடமாற்றம், ஊடுருவலைத் தடுத்தது.

பெண்பதிவர்களின் வருகை 100 % அதிகரித்தது!
ஆமாங்க! சென்றமுறை இருவர் வந்தனர்; இம்முறை நால்வர்! இது மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றம்!

துளசி கோபால், திருவள்ளுவர் ஆகியோரின் வருகையும் ஆக்கபூர்வ பங்கேற்பும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இரண்டுமுறை(விரும்பியோருக்கு அதற்கு மேலும்) பால் இனிப்புகள் வழங்கப்பட்டது.(காசு வசூலிக்கப்படவில்லை). பூங்காவிற்குள் காபி & டீ
எடுத்துவரக் கூடாது என்பதால் நோ காபி; நோ டீ!

புகைப்படங்கள் எடுக்கையில் இருவர் மட்டுமே மிஸ்ஸிங். பல காமிராக்கள் பலமுறை
கிளிக்கின!

இரவு 7 மணிக்குமேல் ஒவ்வொருவராக விடைபெற்றனர்.....

இனி, நண்பர்கள், சந்திப்பு பற்றிய தமது எண்ணங்களைத் தொடர்வார்கள்....................

Tuesday, November 14, 2006

'பெண்ணல்ல.....மழை!'

கெளதம் அவர்களின் 'தடாலடி மழைப்போட்டி'யில் முதற்பரிசு பெற்ற கவிதை. திருமதி.கெளசல்யா அவர்களின் படைப்பிற்கும் முதற்பரிசு
பகிரப்பட்டது.


விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்...
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்..
பெண்ணல்ல...........
மழை!

Friday, November 10, 2006

"மழை"யால் "ஈ'

"மழைப் போட்டி"யில் முதற் பரிசு....தோழியர் கெளசல்யாவுடன் பங்கிட்டுக் கொள்கின்றீர்கள்...
உடனடிப் பரிசு....'போர்ப்ரேம்ஸ்' ப்ரிவியூ அரங்கில்...
படம்?
"ஈ"
தடாலடி அறிவுப்புகள் தொடர்ந்தன...


குளுகுளு அரங்கில் 'சில்'லென ஆரம்பம்.
கதை....'அண்ணன்' லக்கிலுக்(அட! வலையுலகில் நம்ம சீனியர்பா) முன்பே விமர்சனப்பதிவில் பதிந்துள்ளார்.
வல்லாதிக்க நாடுகள், வளர்முக நாடுகளை எப்படி தமது 'சோதனைஎலி'களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன? ஏழைநாடுகளின் 'கறுப்புஆடுகள்' எவ்விதம் துணை போகின்றன? பாதிக்கப் படுவது யார்? பயனடைவது யார்? பூனைக்கு மணி கட்டப் போராடும் எலிகள் என்னவாகின்றன?-இதுதான் கதைக் கரு!
நறுக்கு தெறித்தாற்போல் நெருப்பு வசனங்கள்;இயல்பான காட்சி அமைப்பு;இதமான படப்பிடிப்பு...
ஜனநாதன் இயக்கம்.நிறைய விஷயங்களை சொல்லாமலே சொல்கின்றார்-காக்கா கோட்டையில் சிங்காரவேலர் பேனர்......டாக்டர் ராமகிருஷ்ணனின் நெற்றி......நெல்லை கண்ணனின் தாடி,தொப்பி,உயிர்த்தியாகத்தின் பொழுது அவர் அமர்ந்திருக்கும் பாணி........இது போல் நிறைய உண்டு!
மழைக்காட்சிகள் வருகின்றன;நாயகி நனைகிறாள்;விரசமில்லை;பெண்மையை எக்ஸ்ப்ளாய்ட் செய்யாததற்கு டைரக்டருக்கும் பாராட்டுகள்!


ஒரு நல்ல படம், முடிந்த பின்னரும்,பார்த்தவர் மனதில் சில அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும்....
அத்தகைய அதிர்வை 'ஈ' ஏற்படுத்துகின்றது!

Wednesday, October 25, 2006

"கடன்பட்டார் நெஞ்சம் போல......."

"கடன்பட்டார் நெஞ்சம் போல(போலும்?) கலங்கினான் இலங்கை வேந்தன்"-- இடஞ்சுட்டி விளக்கக் கோரியிருந்தார், சக வலைப்பதிவாளர் ஒருவர். அவர்சார்பில் விடைதேடி வலைப்பதிவுகளில் புகுந்தேன்.......

அய்யகோ!
வெவ்வேறான இருவிடைகள் கிடைத்துள்ளன. அவை:

(1)"இன்று போய் நாளை வா" என்று இராமன் இராவணனை
அனுப்பிவைத்த பின்னர், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில்
இவ்வாறு கூறப்படுவதாக ஒரு பதிவில் கூறப்பட்டு உள்ளது.
(2)தன்மகன் இந்திரஜித் (மேகநாதன்) வீரமரணம் அடைந்த நிலையில்,இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில் இவ்வாறு
கூறப்படுவதாக மற்றொரு பதிவில் விளக்கப்பட்டு உள்ளது.

இவையிரண்டில் ஒன்று தவறானது; அல்லது இரண்டுமே தவறாக
இருக்கக்கூடுமோ?

விபரம் அறிந்தவர்கள் சரியான இடஞ்சுட்டி விளக்குவார்களா?

Thursday, October 19, 2006

அரசு (சமூக)ச் சர்வாதீனங்கள்,

(நிறைவுப்)போட்டி, சர்வாதீனம் (Perfect competition & Monopoly)-- இவையிரண்டில் எது சிறந்தது எனில், நிச்சயமாக போட்டிதான் சிறந்தது. போட்டிச்சந்தையில் விற்போரும் வாங்குவோரும் பலர்; சுய ஆதாயம் கருதி விலையைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது; ஓரியல்பான பொருட்கள்(homogeneous products);நியாயமான விலை('bon prix');ஒரே விலை;உற்பத்தியும் அதிகம்;காரணிகளுக்கு வேலைவாய்ப்பும் அதிகம்.
சர்வாதீனனுக்கு போட்டி இல்லை. அமிதலாபம்(Supernormal or abnormal profit) ஈட்டுவதே அவன் நோக்கம். எப்படி? 1)தனது பொருளுக்கு உயர்ந்தபட்ச விலை விதிக்கலாம். ஆனால் இது பொதுமக்களால் தாங்கக்கூடிய விலையாக இருக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வருமான வரம்பிற்குள் இருக்கவேண்டும். இல்லாவிடில் வாங்குவது குறையும்;விற்பனை குறையும். 2)சர்வாதீனன் மற்றொரு உத்தியைப்பின்பற்றலாம். உற்பத்தியைக் குறைத்து விட்டால் பொருளுக்குத் தட்டுப்பாடு (பற்றாக்குறை) ஏற்படும். மக்களே போட்டிபோட்டு விலையை உயர்த்தி விடுவார்கள்.இம்முறைதான் சர்வாதீனனுக்கு அனுகூலமானது
போட்டிவிலையைக் காட்டிலும் சர்வாதீன விலை அதிகம்;போட்டி உற்பத்தியைக்காட்டிலும் சர்வாதீன உற்பத்தி குறைவு. எனவே போட்டியே சிறந்தது. ஆனால் நிறைவுப்போட்டி எங்கே உள்ளது? பாடநூல்களிலும் வகுப்பறைவிவாதங்களிலும் மட்டுமே உள்ளது.
அரசு(சமூக)ச் சர்வாதீனத்தால் (State or Social Monopoly) பொதுநலம் அதிகரிக்கும்;பெருவாரியான மக்களுக்கு பயன் கிட்டும். தனியார் சர்வாதீனத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் (குறைவான உற்பத்தி, அதிகவிலை, விலை பேதங்காட்டுதல்,வேலைவாய்ப்பு குறைதல்...........)
அரசுச்சர்வாதீனம் எப்பொழுது ஏற்படுகின்றது? சிலவற்றை தனியார்துறையில் விடுவது நாட்டுநலனுக்கு ஆபத்து (இராணுவம், போலீஸ், நீதித்துறை);சில தொழில்களில் தேவையான அளவிற்கு முதலீடு செய்ய தனியாரால் முடியாது (இந்திய ரயில்வே);சிலவற்றை நிர்வகிக்கத் தனியாரால் முடியாது (இரயில்வே,அஞ்சல்& தந்தி); சிலவற்றில் ஈடுபட தனியார் துறை முன்வராது ( வாடிகால், கழிவுநீர் வெளியேற்றம்)சில துறைகளால் தனியாருக்கு லாபமில்லை( குடிநீர், பூங்கா) இவைபோன்ற சமூகச்சர்வாதீனங்களால் சமூகநலன் அதிகரிக்கும். அவை நிரந்தரமானவை. நிர்வாகப் புல்லுருவிகளால் ஏற்படக்கூடிய முறைகேடுகளை ஒழித்துவிட்டால் சமூகச்சர்வாதீனமே சிறந்தது
தனியார் சர்வாதீனம் காலப்போக்கில் மறையும்; அல்லது கட்டுப்படுத்தப்படும

Wednesday, October 18, 2006

ஒப்பீட்டுக் கிரயக் கோட்பாடு

மா.சிவகுமாரின் இன்றைய பொருளியல் கட்டுரையின் பின்னூட்டத்தில் பொன்ஸ் ஓரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவருடைய பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டம் போட்டால் அது சிவகுமாரின் பதிவைவிடப் பெரிதாக உள்ளது. எனவே தனிப்பதிவாகவேப் பதிந்துள்ளேன்
ஒப்பீட்டுக்கிரயக் கோட்பாடு(தராதரச்செலவுக் கோட்பாடு).எழுதியவர், டேவிட் ரிக்கார்டோ (comparitive costs doctrine or theory by David Riccardo) காலம் 18 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகள்
அனுமானங்கள்(Assumptions)1-உற்பத்திக்காரணி உழைப்பு( labour) மட்டுமே, 2-இரண்டே நாடுகள்; இரண்டு பொருட்கள் மட்டுமே உற்பத்தி ஆகும். 3-உழைப்பின் இடப்பெயர்ச்சிமீது தடை ஏதுமில்லை.4-சந்தையில் நிறைவு(பரிபூரண)ப்போட்டி நிலவுகின்றது.5-அரசு பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை(laissez faire)6-எடுத்துச்செல்லும் செலவு(transport costs)இல்லை 7-நீண்டகாலத்திற்கு மட்டுமே பொருந்தும்
எடுத்துக்காட்டு; இரண்டு நாடுகள்- கனவு நாடு & கற்பனை நாடு- உள்ளன. அவற்றில் இரு பொருள்கள் A & B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாட்டில் 100 தொழிலாளர்களைக் கொண்டு 100 A அல்லது 80 B உற்பத்தி செய்ய முடியும். கற்பனை நாட்டில் 100 தொழிலாளர்களைக்கொண்டு 80 A அல்லது 60 B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாடு A&B உற்பத்தியிலும் அனுகூல நிலையில்( advantageous position) உள்ளது; கற்பனை நாடு பிரதிகூல நிலையில் உள்ளது இருப்பினும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருளுக்கும் ஆகும் உற்பத்திச்செலவை ஒப்பிட்டால் கனவுநாடு A உற்பத்தியிலும் , கற்பனைநாடு B உற்பத்தியிலும் அனுகூல நிலையில் உள்ளது தெளிவாகும். எனவே கனவுநாடு A பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும்; கற்பனைநாடு B பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும் இதனால் மொத்த உற்பத்தி பெருகும்;விலை குறையும்;சிறப்புத்தேர்ச்சி ஏற்படும்
18 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரச் சூழ்நிலை மாறிவிட்டது; அனுமானங்களும் தவறானவை. எனவே இக்கோட்பாட்டை மறுத்து புதிய கோட்பாடுகள் உருவாகி உள்ளன. இருப்பினும் இக்கோட்பாட்டின் அடிப்படைக்கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்

Thursday, October 05, 2006

சிபி, பொன்ஸ்,ஜயராமன் அய்யங்கள்....

மா.சிவகுமார் எழுதும் பொருளாதாரக் கட்டுரைகளின் பின்னூட்டங்களில் நாமக்கல் சிபி, பொன்ஸ், ஜயராமன் ஆகியோர் சில வினாக்களை எழுப்பியுள்ளனர்.அவை பற்றி சிறு விளக்கங்கள்....
நாமக்கல் சிபி: நிறைய உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது சந்தைக்கு அனுப்பினால் தேவையும் அதிகரிக்கும்;நல்ல விலையிலும் விற்கலாமே!
செய்பொருள்தொழில்களில் (manufacturing industriees) இது ஓரளவு சாத்தியம். விளைபொருட்களை இருப்பில் வைப்பதற்குக் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் கிடைக்குமா? எலி,புழு,பூச்சிகளால் ஏற்படும் அழிவிலிருந்து (இந்தியாவின் மொத்த தாணிய உற்பத்தியில் 10% இப்படி நாசமாகின்றது)
ந்ப்படி காப்பாற்றுவது?விவசாயிகள் உடனடியாகத் தீர்க்க வேண்டியக்கடங்களை எப்படித் தீர்ப்பது?அடுத்த பருவத்திற்குவேண்டிய நடைமுறைச்செலவிற்கு என்ன செய்வது?
செய்பொருள்களை இருப்பில் வைக்கலாம். ஆயினும் மூலதனச்செலவுகள்? பருவ மாறுதல்கள்.மக்களின் சுவை ,விருப்பெச்சங்கள், பாவனை(tastes, preferences, fashion)மாறினால் தேவை பாதிக்கப்படும். பதிலிகள் தோன்றலாம்;புதிய பொருட்கள் வரலாம்.SALES! SALES! என்று கடைக்காரர்கள் ஏலம் போடுவதன்
தாத்பரியம் புரிகின்றதா?
நிறைய உற்பத்தி, ஸ்டாக் வைப்பது, அப்பப்போ ரிலீஸ் செய்வது....ம்..ஊஹும் ....நடைமுறை சாத்தியமற்றது

பொன்ஸ்:மரணமடந்தவர் தமது ஆயுட்காலத்திலேயே தமது சொத்திலிருந்து தீர்வை கட்ட ஒதுக்கீடு செய்திருந்தால் அது மரணத்தீர்வை எனப்படும்;மணமடைந்தவர் சொத்தில் இருந்து செலுத்தப்படும். இந்தியாவில் இத்தீர்வை விதிக்கப்படுவதில்லை
மரணித்தவர் தக்க ஏற்பாடு செய்யவில்லை. வரிசுகளுக்கு சொத்து கைமாறும். வாரிசுகள் தாம் அடைந்த சொத்தின் மதிப்பின் அடிப்படையில் தீர்வை செலுத்தினால் அது எஸ்டேட் ட்யூடி எனப்படும். இந்தியாவில் 1985 லிருந்து இது நீக்கப்பட்டுவிட்டது

ஜயராமன்:சமூகச்சர்வாதீனம் அல்லது அரசுச்சர்வாதீனத்தால்(social monopoly or state monopoly) அனைவருக்கும் நன்மையே! தனியார் சர்வாடீனத்தில் நிறைவுப்போட்டியைவிட விலை அதிகம்;உற்பத்தி குறைவு. ஆகவே வேலை வாய்ப்பு குறைவு. சர்வாதீனத்தைக் கட்டுப்படுத்த அரசு சட்டமியற்றும்பொழுது வழக்கமான முறைகேடுகள் ஏற்படவும் கூடும்

Thursday, September 28, 2006

பழனிமலையில் முருகனா?

பெரியார்-ராஜாஜி நட்பு பற்றி விடாதுகருப்பு எழுதியிருந்தார். இது தொடர்பாக மேலும் இரண்டு செய்திகள்:

ஈ.வே.ரா மீது கோபங்கொண்ட அவரது தந்தையார் குடும்பச்சொத்துகளை பழனிமுருகன் பெயருக்கு எழுதிவைத்துவிட்டார்.
ஈ.வே.ரா, தமது ஆப்த நண்பரும் வழக்குரைஞருமான ராஜகோபாலாச்சாரியாரை(பிற்காலத்தில் ராஜாஜி) அணுகினார். அவரும் ஈ.வே.ரா சார்பில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார்.
அவர் முன்வைத்த வாதம்:'பழனிமலையில் உள்ளது முருகன் கோவில் இல்லை;அங்கு
தண்டாயுதபாணிக்குத்தான் கோவில் உள்ளது;
எனவே பழனிமுருகன் பெயருக்கு சொத்தை எழுதி
வைத்தது செல்லாதது' என்பதாகும்.
"எதிரிநண்பர் ஈ.வே.ரா"(உபயம்:ராஜாஜி) தமது நண்பரின் மதிநுட்பத்தை வியந்து இந்நிகழ்ச்சியைக்
குறிப்பிடுவார்.

இப்பதிவில் எவ்வித உள்குத்தும் இல்லை. இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதப்பட்டது

Wednesday, August 23, 2006

பின்னூட்டத்திற்குப் பரிசு!

"பொருளாதார அறிவு சிறிதேனும் அற்றவர்கள் முழுமையான மனிதனாகக் கருதப்பட மாட்டார்கள்"என்பதாக ஓர் ஆங்கில வழக்கு உண்டு..ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ--- படித்தோ, படிக்காமலோ--பொருளாதார அறிவுடன்தான் செயல்படுகின்றோம். "Economics is commonsense made more difficult" என்பார்கள். கடினப்படுத்தப்பட்ட சாதாரணப் பொதுஅறிவை எல்லோர்க்கும் புரியும் எளிய தமிழில் விளக்கி
வருகின்றார்,திரு சிவகுமார்; எளிமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று மலினப்படுத்தவில்லை
அவருடைய பணி பாராட்டுக்கு உரியது. இப்பொழுது, சிறந்த பின்னூட்டத்திற்குப் பரிசு அளிப்பதாகவும் அறிவித்து உள்ளார்.
பரிசுப்பொருளா முக்கியம்? பரிசு பெற்றோம் எனும் உணர்வுதானே முக்கியம்!
பரிசுகள் நம்மை ஊக்குவிக்கின்றன!
நான்கூட, "வேதிப்பொறியிய"லைப் படிக்க முயன்றேன்;முடியவில்லை;விட்டுவிட்டேன்.
வெட்டிப்பயலின்(பாலாஜி மனோஹர்)கணினிக் கட்டுரைகளை ஆரம்பத்தில் ஆவலுடன் படித்தேன்.....டித்தேன்....த்தேன்.....தேன்....ன்...ம்ஹூம்.
பரிசுகள் அளித்திருந்தால் தொடர்ந்திருப்பேனோ?
சிறந்த பின்னூட்ட அதிர்ஷ்டசாலி யார்....?
ஒவ்வொரு வார முடிவிலும் தெரியவரும்.
அதுவரையில்..............
போட்டியில் பங்கேற்போமே!

(திருமதி துளசி கோபாலும், நானும் போட்டியாளர்கள் அல்லர்)

Thursday, July 27, 2006

என் பெயரில் போலிப் பதிவுகள்.

என் பெயரில் என் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளும் பின்னூட்டங்களும் இடப்பட்டுள்ளன. இவை எதுவுமே நான் போட்டதில்லை
என் வலைத்தளம் sivagnanamji.blogspt.com. அதில் என் படம் இருக்காது. மாறாக, என் புகைப்படம் கொண்ட sivananamji.blogspot.com எனும் பதிவுகளும்
பின்னூட்டங்களும் போலியானவை. அவற்றால்
பதிவர் எவருக்கேனும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். போலிகளை இனங்கண்டு வெறுத்தொதுக்க வேண்டுகிறேன்.
வலைதளத்தில் கல்வியாளர்கள், கண்ணியமானவர்கள், கணிணி விற்பன்னர்கள் போன்றோர் மட்டுமே இருப்பார்கள் எனும் என்
நம்பிக்கை, தகர்ந்தது.
என் ப்ளாக்கர் எண் 16342789. நான் அதர் ஆப்ஷன் வைத்திருக்கும் பதிவுகளில் பின்னூட்டம்
இடமாட்டேன். அப்படி இட நேர்ந்தால் அல்லது ப்ளாக்கர் இல்லாத பதிவுகளில் இட நேர்ந்தால்
அப்பின்னூட்ட்த்தின் நகலை நான் அப்போதைக்கு
குறிப்பிடும் என் பதிவுகள் ஒன்றில் பின்னூட்டமாக இடுவேன். அவ்வாறு இடுவதையும் சொல்வேன். அதை சரி செய்து பார்க்காமல் என்
பெயரில் வரும் பின்னூட்டத்தை அனுமதிக்காதீர்கள்.
என் பெயரையும், புகைப்படத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் வலைப்பதிவர் ஏன் இப்படிச் செய்கின்றார் என்பது புரியவில்லை.
என் தலைமுறை தனிமனிதத் தாக்குதலில்
நம்பிக்கை அற்றது; இனவழி உரிமைகளை எச்சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதது.
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பிற்கு எடுத்துக்காட்டாக, கலைஞர்,"சங்கத்தமிழி"ல் குறிப்பிடுவது
பெரியார்-ராஜாஜி நட்பைத்தானே?
அரசியல் வித்தகரும், பொதுவுடைமைக்கட்சியின்(இடது) முன்னோடியுமான தோழர் பி.ராமமூர்த்தியின்
திருமணம் பெரியார் தலைமையில்தானே நடந்தது?
கல்லூரி மாணவனாக, பெரியாரைப் பார்க்கச்
சென்ற பொழுது, அப்பெருமகனார் முதுமைக்காலத்திலும் எழுந்து நின்று வரவேற்றதும்,பின்னர் எழுந்து நின்று வழியனுப்பியதும் என் நெஞ்சை விட்டு நீங்கா
நினைவு ஆகும்.
பிறர் பெயரில் பதிவிடுவோரையெல்லாம்
கணிணி உலகில் ஏற்றிவிடத்தான் இத்தனை ஆண்டுகாலப் போராட்டமா எனும் கசப்பு உணர்வே எழுகின்றது.

"கள்ளிப்பால் குடிச்சு...."

சந்தோஷின் சமையல் ஆராய்ச்சி பற்றி குறிப்பிடுகையில்,"சீக்கிரமா சமைக்கக் கத்துக்கங்க; இல்லாட்டி உங்களுக்கெல்லாம் கல்யாணமுன்னு ஒண்ணு நடக்குறது கஷ்டம்தான்"னு துளசி எச்சரிக்கை விட்டாங்க.
சமையல் செய்ய கற்றுக் கொண்டாலும் கூட,கல்யாணம் நடப்பது கஷ்டம்தான்னு புள்ளிவிபரம் கூறுது. கள்ளிப்பால்,விதைநெல் புண்ணியத்தால் பால்விகிதம்(sexratio) குறைந்து வருகின்றது.
கடந்த நூறாண்டுகளில், தமிழ்நாட்டில் ஆண்:பெண் விகிதம் குறைந்து வருவதை கீழ்க்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன:
1901 ல் 1000:1044
1911 ல் 1000:1042
1921 ல் 1000:1029
1931 ல் 1000:1027
1941 ல் 1000:1011
1951 ல் 1000:1007
1961 ல் 1000:992
1971 ல் 1000:978
1981 ல் 1000:977
1991 ல் 1000:974
2001 ல் 1000:986(quick estimate)

2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்:பெண் விகிதம் 1000:933.

மொத்த மக்கட்தொகையில் ஆண்களை விட
பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைவிட 0-6 வயது பிரிவினரில் இவ்விகிதம்
இன்னும் குறைவாக இருப்பதுதான் அச்சுறுத்துகின்ற்து. 2001 சென்ஸஸ்படி,தமிழ்நாட்டில் 0-6 வயது பிரிவில்
ஆண்பெண் விகிதம் 1000:942 ஆகும்(இந்தியாவில்
இவ்விகிதம், 1000:927).இவ்வயதுப் பிரிவில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணம் கள்ளிப்பாலா அல்லது விதைநெல்லா அல்லது வேறா?
சமையல் செய்யக் கற்றுக்கொண்டாலுங்கூட,
ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இல்லாவிட்டால்,"கல்யாணம்னு ஒண்ணு நடப்பது
கஷ்டம்"தானே?

Sunday, July 23, 2006

உலக மக்கள்தொகை வளர்ச்சி வேகம்

இன்றைய(7/23/06) நிலவரப்படி உலக மக்கள்தொகை 6530 018 029(USCensus Bureau,World POPClock Projection)
இவ்வளர்ச்சியை அடைவதற்கு எவ்வளவு காலம் பிடித்தது என்பதைப் பார்ப்போமா?
உலக மக்கள்தொகை முதன்முதலாக 1804 ல்
1 பில்லியனை எட்டிப் பிடித்தது.அதாவது ஒரு பில்லியன் மக்கள் தொகையை அடைவதற்கு 1804
ஆண்டுகள் தேவைப்பட்டது
1927 ல்- 123 ஆண்டுகளில்- 2 பில்லியனாக அதிகரித்தது.
1960 ல்-33 ஆண்டுகளில்- 3 பில்லியனாக
அதிகரித்தது
1974 ல்-14 ஆண்டுகளில்- 4 பில்லியனாக
அதிகரித்தது
1987 ல்-13 ஆண்டுகளில்- 5 பில்லியனாக
அதிகரித்தது.
1999 ல்-12 ஆண்டுகளில்- 6 பில்லியனாக
அதிகரித்தது
2013 ல்-14 ஆண்டுகளில்- 7 பில்லியனாகவும்
2028 ல்-15 ஆண்டுகளில்-8 பில்லியனாகவும்
2050 ல்-22 ஆண்டுகளில்-11 பில்லியனாகவும் அதிகரிக்குமென்று முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.(UNPF Report,2001)
மக்களே, இந்த வேகம் போதுமா........?

Friday, July 14, 2006

நெல்லையால் தொல்லையா?

"மதுபாலா,திவ்யாபாரதி,மணிஷா,த்ரிஷா,ஜோதிகா என பலபேர் காலடி பட்ட புண்ணியமண்"(அம்பி) நெல்லையில் ஆகஸ்ட்டில் நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு,அம்பி அறைகூவி அழைப்பு விடுத்துள்ளார். வாழ்க!
சென்னையிலும் ஒரு மாநாடு நடைபெறுமென்றும்,அதன் பொறுப்பை சுபா கவனித்துக் கொள்வார் என்றும் அம்பி அறிவித்துள்ளார்
சென்னையில் டோண்டு,ட்டிபிஆர் ஜோஸப் முயற்சியில் இரு சந்திப்புகள்-மே 29 மற்றும் ஜூலை 2 ஆகிய நாட்களில்- நிகழ்ந்துள்ளன. அடுத்த சந்திப்பிற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன
இந்நிலையில்,சென்னையில், வலைப்பதிவர் சந்திப்பிற்கான எற்பாட்டை சுபா கவனித்துக் கொள்வார் எனும் அறிவிப்பு ஏன்?
டுபுக்கு அவர்களுக்கு இவ்விபரம் தெரியுமா?
கீரைக் கடைக்கும் எதிர்க்கடையா?
(பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், விரவாஞ்சி,பாரதி போன்றோரின் ஆன்மா என்னை
மன்னிக்கட்டும். நெல்லை நண்பர்கள் கோபிக்கவேண்டாம்;நெல்லையின் சிறப்பாக அம்பி குறிப்பிட்டதைத்தான் முதல் இரு வரிகளில் மீள்பதிவு செய்தேன்)

Wednesday, July 12, 2006

"மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க..."

மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க' எனும் தலைப்பிட்டு 'தின மலர்'10/07/06 நாளிதழில் கீழ்வரும் செய்தி வெளியாகி உள்ளது
அரசு டாக்டர் சங்க மாநிலத் தலைவர்,"மருத்துவக்கல்லூரி துவக்க ரூ.200 கோடி செலவாவதைத் தவிர்த்து,ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் ரூ. 20 கோடியில் வசதிகளை செய்தாலே இடங்களை அதிகரித்து கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்"என்று கூறியுள்ளார்.
அரசின் வசம் நிதித்தட்டுப்பாடு இருப்பதால்,ஒரு தற்காலிக ஏற்பாடாக இதைக்கூறுகிறாரா அல்லது நிரந்தரத்தீர்வா என்பது தெரியவில்லை
மக்கள்தொகை அதிகரித்து வருகின்றது;புதுப்புது நோய்களும் தோன்றிவருகின்றன;மக்களிடம் விழிப்புணர்வும் வளர்ந்து வருகின்றது.இந்நிலையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதுவே பொருத்தமாகும்
மேநிலைக் கல்வி முடித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் எவ்வித உடன்தொடர்பும்(correlation) இல்லை
மாநிலத்தில் இந்த ஆண்டில் 52000 பொறியியல் இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகின்றது.(நிர்வாக ஒதுக்கீடு தனி)
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 27050 இடங்கள் உள்ளன.இதில் கவுன்சிலிங் மூலம் 14906 இடங்கள் நிரப்பப்படும்
தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 187 இடங்கள் போக 1458 இடங்கள் மட்டுமே உள்ளன.பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீடு போக 36 இடங்கள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 4000 ஆண்டுக்கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இக்கட்டணம் ரூ.1,30,000 என்று ராமன் கமிட்டி பரிந்துரைத்து உள்ளது
இந்நிலையில் தொலைநோக்குடன் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதுதான் நிரந்தரத் தீர்வு ஆகும்.

Saturday, July 08, 2006

மன்னராட்சியும் மக்களாட்சியும்

அரசியல் அறிவியல் வகுப்பு.பேராசிரியர் மன்னராட்சி முறைக்கும் மக்களாட்சி முறைக்கு முள்ள வேறுபாட்டை வரலாற்று ஆதாரங்களுடன்
விளக்கிக்கொண்டிருந்தார்.....கடைசி பென்ச் வழக்கப்படி.......பேராசிரியருக்குக் கோபம் வந்து விட்டது.கடைசி பென்ச் மாணவன் ஒருவனை சுட்டி எழுப்பிக் கேட்டார்:"நான் என்ன நடத்துகின்றேன்? நீ என்ன செய்கிறாய்?".
மாணவன் வகுப்பை சுற்றுமுற்றும் ஒருமுறை
பார்த்துவிட்டு தலையைக்குணிந்து கொண்டான்.
பேராசிரியருக்குக் கோபம் தீரவில்லை. மீண்டும் கேட்டார்:"எங்கே சொல் பார்ப்போம். மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் என்ன வித்தியாசம்?"
மாணவன் ஒருமுறை தொண்டையைக் கணைத்துக் கொண்டு சொன்னான்:"ஸார், ராஜா
மகன் ராஜாவானா அது மன்னராட்சி; மந்திரிகள்
பிள்ளைகள் மந்திரிகள் ஆவது மக்களாட்சி;ராஜ பரம்பரை முறையை ஒழித்துவிட்டு மந்திரிகள் பரம்பரை முறையைக் கொண்டு வந்தா........"
வகுப்பறை அதிர்ந்தது!